கிராமத்துச் சாலைகளில் விடியல் பயணம்: ஒட்டன்சத்திரத்தில் புதிய பேருந்துகளைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அர.சக்கரபாணி!

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்து சேவை மற்றும் நீட்டிக்கப்பட்ட பேருந்து வழித்தடங்களைத் தொடங்கி வைக்கும் விழா நடைபெற்றது. தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு, ஒரு புதிய பேருந்து இயக்கம் மற்றும் இரண்டு பேருந்து நீட்டிப்பு இயக்கங்களைப் பச்சைக்கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழக அரசு அறிவிக்கும் முன்னோடித் திட்டங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் வாழும் கடைக்கோடி மக்களையும் சென்றடையும் வகையில் முதலமைச்சர் அவர்கள் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாக அமைச்சர் இதன்போது பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பழைய பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மதுரை கோட்டத்தின் கீழ் திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் மண்டல அலுவலகங்கள் மூலம் நகர், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் பேருந்து சேவைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த 07.05.2021 அன்று தொடங்கப்பட்ட மகளிருக்கான ‘விடியல் பயணத் திட்டம்’ சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 23.78 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணிற்கும் மாதம் சுமார் 1000 ரூபாய் வரை சேமிப்பு ஏற்பட்டு அவர்களின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சேவை விரிவாக்கத்தின் கீழ், ஒட்டன்சத்திரம் தொகுதியில் ஒட்டன்சத்திரம் – தொப்பம்பட்டி இடையேயான புதிய வழித்தடப் பேருந்து இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று ஒட்டன்சத்திரம் – மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் ஒட்டன்சத்திரம் – தங்கச்சியம்மாபட்டி ஆகிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திண்டுக்கல் மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். குக்கிராமங்களுக்கும் சாலை மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தருவதே அரசின் முதன்மை நோக்கம் என அமைச்சர் தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.

Exit mobile version