கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே கால்வாய் தடுப்பு சுவர் கட்டுமான பணியை பாதியிலேயே நிறுத்திய ஒப்பந்ததாரர்- பணி நிறுத்தப்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சம்.
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பேரூராட்சிக்குட்பட்ட மேட்டு குடியிருப்பு பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வரும் ஸ்கீம் கால்வாய் உள்ளது. இந்தப் பாதையானது சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக கால்வாயில் தடுப்புச் சுவர் இடிந்துவிட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். அதைத்தொடர்ந்து தற்போது பேரூராட்சி சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய் அருகே தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில் தடுப்புச் சுவர் அமைக்கும் பணிக்காக பணிகள் மேற்கொண்டு வந்த நிலையில் திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பாதியிலேயே தடுப்பு சுவர் கட்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்புச் சுவர் அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கால்வாய் மிகவும் பழமையான பகுதியாக இருப்பதால் ஊற்று நீர் கழிவுநீர் மற்றும் மழை நீர் தேங்குவதோடு கால்வாய் உடைந்து குடியிருப்புக்குள் நீர் செல்லும் வாய்ப்பு உள்ளது எனவும் தடுப்பு சுவர் கட்டாமல் இருப்பதால் அந்த வழியாக செல்லும் சிறு குழந்தைகள் தவறி விழும் பட்சத்தில் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றன. தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதியை கருத்தில் கொண்டு எவ்வித உயிர் சேதமும் ஏற்படுவதற்கு முன்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள கால்வாய் தடுப்புச் சுவர் கட்டுமான பணியை உடனடியாக மீண்டும் தொடங்கி முழுமையாக முடித்து தர பேரூராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
