நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தலைமை செயலாளர் உட்பட இருவரும் ஜூலை 21ல் நேரில் ஆஜராக உத்தரவு

சென்னை :
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழகத்தின் தற்போதைய தலைமை செயலாளர் முருகானந்தமும், முன்னாள் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவும், வரும் ஜூலை 21ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவிட்டுள்ளார்.

அரசு ஊழியர் ஒருவர் பணிக்காலத்தில் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. எனினும், இந்த நியமனத்தில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகப் புகார்கள் எழுந்ததை அடுத்து, இந்த வழக்கை கடந்த 2023ல் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, கருணை அடிப்படை நியமனத்திற்கு ஒரு தெளிவான நடைமுறை மற்றும் காலக்கெடு நிர்ணயிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், அதனைப் பின்பற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என நினைத்த நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துக்கொண்டது.

இந்த நிலையில், 2023 முதல் இதுவரை பதவியில் இருந்த தலைமை செயலாளர்கள் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி, முருகானந்தம் மற்றும் ஷிவ்தாஸ் மீனா இருவரும் ஜூலை 21ல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.

Exit mobile version