நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வசிக்கும் தீராத வலி மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில், குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் “வலியில்லா நீலகிரி” (Palliative Care) என்ற மகத்தானத் திட்டம் நேற்று விமரிசையாகத் தொடங்கி வைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து முன்னெடுத்துள்ள இந்த முன்னோடித் திட்டத்தை, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
இந்த முக்கிய நிகழ்வில், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை கூடுதல் முதன்மை செயலாளர் பி.செந்தில்குமார் மற்றும் தேசிய சுகாதார குழுமத்தின் தமிழ்நாடு குழும இயக்குநர் அ.அருண் தம்புராஜ் ஆகியோர் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்றுத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விளக்கமளித்த கலெக்டர் லட்சுமி பவ்யா, “நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட அளவில் ஒருங்கிணைந்த வலி மற்றும் நோய்த்தணிப்பு சிகிச்சைத் திட்டம் (Integrated Palliative Care) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாகப் புற்றுநோய், பக்கவாதம் மற்றும் முதியோர்களுக்கான மூப்பு சார்ந்த தீவிர உடல் பாதிப்புகளால் அவதிப்படுவோரின் வாழ்வாதாரத் தரத்தை மேம்படுத்துவதே இதன் பிரதான நோக்கம். இத்திட்டம் அரசு–தனியார் பங்களிப்பு (PPP Mode) முறையில், மைக்ரோலேண்ட் பவுண்டேசன் மற்றும் பாலியம் இந்தியா ஆகிய பயிற்சிப் பங்காளிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இது தமிழக அரசின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று உயர்தர சிகிச்சை வழங்க வழிவகை செய்கிறது,” எனத் தெரிவித்தார்.
தற்போதுள்ள மாவட்ட நோய்த்தணிப்பு சிகிச்சை மையங்கள் நவீனப்படுத்தப்படுவதுடன், வீடுகளுக்குச் சென்று வழங்கப்படும் வலி மேலாண்மை சேவைகளின் தரத்தை உயர்த்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் தேவையற்ற மருத்துவமனை அனுமதிகள் குறைக்கப்படுவதோடு, ஏழை எளிய நோயாளிகளின் மருத்துவச் செலவுகளும் கணிசமாகக் குறையும். “எந்தவொரு நோயாளியும் உரிய சிகிச்சையின்றி வலியால் அவதிப்படக் கூடாது என்பதே எங்களது இலக்கு” என்று கலெக்டர் உறுதிபடத் தெரிவித்தார்.
திட்டத்தின் அடுத்த கட்டமாக, உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதற்கான பிரத்யேக பயிற்சி மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்தச் சமூக அடிப்படையிலான சுகாதாரக் கட்டமைப்பு படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்தத் தொடக்க விழாவில் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஸ்ரீனிவாசன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) ராஜசேகரன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) சோமசுந்தரம், குன்னூர் நகர்மன்றத் தலைவர் சுசீலா, இருப்பிட மருத்துவ அலுவலர் ரவிசங்கர், மைக்ரோலேண்ட் பவுண்டேஷன் நிறுவனர் கல்பனா கார்த்திக் மற்றும் பாலியம் இந்தியா குழுவினர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்தத் திட்டத்தின் வருகை, நீலகிரி மாவட்ட மலைவாழ் மக்கள் மற்றும் நோயாளிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
















