திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில், 115 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட், சரக்கு வாகன முனையம், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட கட்டிடத் திட்டம், ரூ.900 கோடி மதிப்பில் உருவாகியுள்ளது.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் மற்றும் கனரக சரக்கு வாகன முனையத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை 8 மணிக்கு விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு வந்தடைந்தார். அங்கு நடைபெற போகும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, அவர் அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்குகிறார்.
திறப்பு விழா நிகழ்ச்சி முடிந்த பிறகு, அதே நாளிரவு விமானம் மூலம் அவர் மீண்டும் சென்னை திரும்புகிறார்.