வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதல்வர் ஸ்டாலின் வெற்று விளம்பரம் தேடுகிறார் நயினார் நாகேந்திரன் விளாசல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் மாநிலம் தழுவிய தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாஜக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. பாஜக மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடினார்.

அவர் தனது உரையில், “கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை இன்னும் காகித அளவிலேயே உள்ளன. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், எதையுமே செய்யாமல் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெற்று விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி வருகிறார். காவிரி விவகாரத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் அணைகள் கட்டப்பட்ட போது கருணாநிதி மௌனமாக இருந்தார். இப்போதும் அண்டை மாநிலங்களுடன் இணக்கமாக இருந்து தமிழகத்தின் நலனை முதல்வர் புறக்கணிக்கிறார். ஆனால், எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரையிலான அதிமுக ஆட்சியில் காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டது” என்று சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், விவசாயிகளின் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை எனக் குற்றம் சாட்டினார். “டெல்டா பகுதியில் கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளுக்கு வெறும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் இந்த அரசு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்குவது வேதனையானது. இதுதான் இவர்களின் திராவிட மாடல் ஆட்சியா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், சிறுபான்மையினர் குறித்துப் பேசிய அவர், வட இந்திய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும், திமுக போலி மதச்சார்பின்மையைப் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுதல் மற்றும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் தீர்மானங்கள் குறித்துப் பேசிய அவர், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்ததிலிருந்து திமுக தரப்பு மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைவது உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார். இந்த எழுச்சிமிகு கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் எம்.எல்.ஏ, பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பூ, தமாகா மாநில பொதுச் செயலாளர் குடவாசல் எஸ். தினகரன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Exit mobile version