கோவை: தமிழகத்தின் புதிய சுற்றுலா மற்றும் பசுமை அடையாளமாக உருவாக்கப்பட்ட கோவை செம்மொழி பூங்காவை, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 45 ஏக்கர் பரப்பளவில், ரூ.208.50 கோடி மதிப்பில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பூங்கா, அரிய தாவரங்கள், மரவகைகள், கலாச்சாரச் சிறப்புகள் என பல்வேறு அம்சங்களைக் கொண்டது.
பூங்காவின் அம்சங்கள்
செம்மொழி பூங்காவில் 23 விதமான தாவரவியல் தோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் செம்மொழி வனம், மூலிகை வனம், மகரந்த தோட்டம், ரோஜா தோட்டம், மூங்கில் தோட்டம், பாலைவன தோட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. ஜெர்மன் முறையில் 2 கி.மீ நீளத்தில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதும் சிறப்பம்சம்.
சங்க இலக்கியங்களில் இடம்பெறும் செண்பக மரம், மிளகு மரம், திருவோட்டு மரம், கடல் திராட்சை போன்ற அரிய மரவகைகள் பூங்காவில் நடப்பட்டுள்ளன. மேலும், 2,000-க்கும் மேற்பட்ட ரோஜா இனங்களும் ரோஜா தோட்டத்தில் காண்பிக்கப்படுகின்றன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அங்கு நிறுவப்பட்டுள்ளன.
பார்வையாளர்களுக்கான வசதிகள் :
ஒவ்வொரு தாவரத்துக்கும் க்யூஆர் மற்றும் பார் கோடு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதால், ஸ்கேன் செய்து அவற்றின் விவரங்களை ஒலி வடிவில் கேட்க முடியும்.
நுழைவுச்சீட்டு மையம், அனுபவ மையம், 500 பேர் அமரும் திறந்தவெளி அரங்கம், உணவகம், ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி ஆகியவை பொதுமக்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
பழங்கால தமிழ் மக்கள் பயன்படுத்திய பொருட்கள் இடம்பெறும் அருங்காட்சியகம், தாவரவியல் அருங்காட்சியகம், படிப்பகம், சக்கரநாற்காலி வசதி, பேட்டரி வாகனங்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன.
உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் :
உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட திறந்தவெளி ஜிம், 4,000 சதுர அடி அளவில் உருவாக்கப்பட்ட டெராரியம், 14,000 சதுர அடி குழந்தைகள் விளையாட்டு திடல், மாற்றுத்திறனாளிகள் விளையாட தனி திடல் போன்ற வசதிகளும் பூங்காவில் உள்ளன.
திட்டத்தின் பின்னணி
2010-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அந்நாள் முதல்வர் கருணாநிதி, காந்திபுரம் சிறையை மாற்றி செம்மொழி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் ஆட்சி மாற்றத்தால் திட்டம் கைவிடப்பட்டது. 2021-ல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின் திட்டம் மீண்டும் உயிர்த்து, இரண்டு கட்டமாக பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி 165 ஏக்கரில் முதல் கட்டப் பணிகள் முடிக்கப்பட்டு இன்று திறந்து வைப்பு நடைபெற்றுள்ளது.
மாலையிலான முதலீட்டாளர்கள் மாநாடு
மாலை 5 மணிக்கு கோவையில் உள்ள ‘லீ மெரிடியன்’ ஹோட்டலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதில் ரூ.43,844 கோடி முதலீட்டில் 158 புதிய தொழில்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இதன் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் மாலை 6.30 மணிக்கு முதல்வர் ஈரோடு புறப்படுகிறார்.
