டெல்லி விபத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் முழுவதும்  சோதனைச் சாவடிகள்!

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடி விபத்து ஏற்பட்டதையடுத்து, இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா மற்றும் புனிதத் தலங்களான ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் மற்றும் ஏர்வாடி தர்கா ஆகியவை வெளிமாநிலங்களைச் சேர்ந்த அதிக சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் பகுதிகள் என்பதால், இங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து போலீசாரும் இரவு நேர ரோந்துப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சோதனைச் சாவடிகள்: மாவட்டம் முழுவதும் 23 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் மற்றும் பயணிகளின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாகனச் சோதனை: ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட 25 இடங்களில் வாகனச் சோதனை நடைபெறுகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி போன்ற வெளிமாநிலப் பதிவெண் கொண்ட வாகனங்கள் முழுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. தங்கும் விடுதி கண்காணிப்பு: ராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு விடுதிகளைக் கண்காணிக்க 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விடுதிகளில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் முகவரி மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில், பல்வேறு மாநில ரயில்கள் வந்து செல்வதால், “தேவசேனா” என்ற வெடிகுண்டு கண்டறியும் நாய் உதவியுடன், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் ரயில் நிலையத்தைப் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயில் மற்றும் உத்தரகோசமங்கை கோயிலில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.உளவுத்துறை உத்தரவின் பேரில், தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கியக் கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, இந்திய கடலோரக் காவல் படை மற்றும் கடலோரக் காவல் குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், உச்சப்புளி ஐஏஎஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர்கள் மூலமாக வான் வழியும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தொண்டி, ஏர்வாடி, ராமேஸ்வரம் ஆகிய மூன்று கடலோரப் பகுதிகளிலும் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏர்வாடி தர்கா சுற்றுவட்டாரப் பகுதியில் இன்ஸ்பெக்டர் தலைமையில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்தார்.

Exit mobile version