வேளச்சேரி : மாணவியிடம் பாலியல் சீண்டல் புகார் – ‘Chandru Law Academy’ உரிமையாளர் கைது

சென்னை : சென்னை வேளச்சேரியில் உள்ள ‘Chandru Law Academy’ என்ற சட்டப் பயிற்சி மைய உரிமையாளர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

வேளச்சேரி, அம்பிகா தெருவில் வசித்து வரும் சந்திரசேகர் (வயது 50) என்பவர், நீதிபதியாக பணியாற்ற விரும்பும் law aspirants-ஐ உருவாக்கும் நோக்கில் ‘Chandru Law Academy’ எனும் பயிற்சி மையத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையத்தில் பயிலும் 23 வயது மாணவி ஒருவர், சந்திரசேகர் தன்னிடம் பாலியல் ரீதியில் சீண்டல் செய்ததாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தனியாக அழைத்து தகாத வார்த்தைகள்… மிரட்டலும் !

மாணவி அளித்துள்ள புகாரில், சந்திரசேகர் தன்னை தனியாக அழைத்து, தகாத வார்த்தைகளில் பேசியதோடு, “கார் அனுப்புகிறேன், இரவு அலுவலகத்திற்கு வா” என அழைத்ததாக கூறியுள்ளார். மாணவி இந்த அழைப்பை மறுத்ததையடுத்து, அனைவருக்கும் முன்னிலையில் அவமானப்படுத்தியும், பயிற்சி மையத்திலிருந்து விலக முயன்றபோது, “வழக்கறிஞர் பதிவை ரத்து செய்து விடுவேன்” என மிரட்டியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், பல மாணவிகளிடம் இதுபோன்ற பாலியல் நெருக்கடிகள் ஏற்படுத்த முயற்சி செய்துள்ளதாகவும், அவருக்கு துணையாக செயல்பட்ட அலுவலக உதவியாளர் மாயா (வயது 35) மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட உரிமையாளர் !

புகாரின் அடிப்படையில் வேளச்சேரி காவல்துறை நடவடிக்கையில் இறங்கியதில், தலைமறைவாக இருந்த சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். மாயா என்பவர் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது சந்திரசேகர் மீது ஏற்கனவே இத்தகைய புகார்கள் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version