10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு!

புதுடில்லி : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை வருடத்திற்கு இருமுறை நடத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடர்பாக சி.பி.எஸ்.இ. தேர்வுக் கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் கூறியதாவது :

2026ம் ஆண்டிலிருந்து, 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். இந்த நடவடிக்கை மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் அமையும். முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியில், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்தில் நடைபெறும். அதன்படி, முதல் கட்ட தேர்வின் முடிவுகள் ஏப்ரலில், இரண்டாவது கட்ட தேர்வின் முடிவுகள் ஜுனிலும் வெளியிடப்படும்.

மேலும், மாணவர்கள் கட்டாயமாக முதல் கட்ட தேர்வில் பங்கேற்க வேண்டும். இரண்டாம் கட்ட தேர்வில் பங்கேற்பது விருப்பத்திற்குரியது. மாணவர்கள், முதல் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தால், இரண்டாவது தேர்வில் பங்கேற்று மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மாணவர்களுக்கு கணிதம், அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மொழிப்பாடங்களில் ஏதேனும் மூன்று பாடங்களில் மதிப்பெண்கள் மேம்படுத்த அனுமதி வழங்கப்படும். உள்மதிப்பீட்டு (Internal Assessment) தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version