கரூர் நெரிசல் விபத்து தவெக தலைவர் விஜய்யை விசாரிக்க சிபிஐ திட்டம்!

கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் நடந்த நெரிசல் விபத்து தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையை நடத்துவதற்காக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகையில் சிபிஐ-யின் சிறப்பு அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சிபிஐ காவல் கண்காணிப்பாளர் (SP) பிரவீன்குமார் தலைமையிலான சிறப்புக் குழுவினர் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், மற்றும் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக, கரூர் மாவட்ட அரசு நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறை தரப்பிலிருந்து வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் விவரங்களைச் சிபிஐ அதிகாரிகள் குழு தற்போது முழுமையாக ஆய்வு செய்துள்ளது. அரசு மற்றும் காவல்துறை வழங்கிய ஆவணங்களின் ஆய்வு மற்றும் நிர்வாகிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில், தவெக தலைவர் விஜய் அவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளது.

விசாரணைக்காக விஜய்யை கரூருக்கு அழைத்தால், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குப் பெரிய அளவில் ஏற்பாடு செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்திலேயே வைத்து அவரை விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான சம்மன், தில்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திலிருந்து விரைவில் நடிகர் விஜய் அவர்களுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் நடக்கும் இந்த சிபிஐ விசாரணை, தமிழக அரசியல் வட்டாரத்திலும், தவெக ஆதரவாளர்கள் மத்தியிலும் மிகுந்த கவனத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version