ஹிமாச்சலில் 500 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து விபத்து – ஆசிரியர் குடும்பம் உள்பட 6 பேர் பலி

ஹிமாச்சல் பிரதேசத்தில் 500 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட பேரவிபத்தில், அரசு பள்ளி ஆசிரியர் குடும்பத்தினரும், ராணுவ வீரரையும் சேர்த்து 6 பேர் பலியாகினர்.

பானிகேட் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் (40), புல்வாஸ் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பள்ளியில் அவரது குழந்தைகளும் படித்து வந்தனர். ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடிய பிறகு, குடும்பத்தினருடன் காரில் புல்வாஸில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

நேற்று நள்ளிரவு, அவர்கள் பயணித்த கார் சம்பா மாவட்டம் சன்வாஸ் பகுதியில் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, 500 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

தகவல் அறிந்த உள்ளூர் மக்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போலீசாருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சாலையோரம் இருந்து பள்ளத்தாக்குக்குள் இறங்கி, 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காரில் சிக்கியிருந்த அனைவரின் உடல்களும் மீட்கப்பட்டன.

விபத்தில், ராஜேஷ்குமார், அவரது மனைவி ஹன்சோ (36), மகள் ஆர்த்தி (17), மகன் தீபக் (15) ஆகியோர் உயிரிழந்தனர். இவர்களுடன் ஹன்சோவின் சகோதரர் ஹேம்ராஜ் (37) என்பவரும் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் ராணுவத்தில் பணியாற்றி வந்தவர்; விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். அதே ஊரைச் சேர்ந்த ராகேஷ்குமார் என்பவரும் உயிரிழந்தார்.

சம்பா மாவட்ட போலீஸ் எஸ்.பி. அபிஷேக் யாதவ் தெரிவித்ததாவது:
“விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், உடனடியாக மீட்பு குழுவை அனுப்பினோம். காரில் இருந்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் சடலங்களை மீட்டோம். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Exit mobile version