திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு கோயில் குளத்தில் மூளையை தாக்கும் அமீபா நுண்ணுயிரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் குளத்தில் குளித்த மூன்று குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள நெடுமங்காடு கரிப்பூர் பகுதியில் அமைந்துள்ள முகவூர் மகா விஷ்ணு கோயில் குளத்தில் கடந்த வாரம் மூன்று குழந்தைகள் குளித்தனர். சில நாட்களுக்குள் அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேற்கொண்ட பரிசோதனையில், மூவருக்கும் மூளையை தாக்கும் அமீபா (Naegleria fowleri) தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வகச் சோதனையில், குறித்த கோயில் குளத்தின் நீரில் இந்த உயிர்க்கொல்லி அமீபாவின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் மக்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவுகிறது.
சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறை அலட்சியத்தைக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மக்கள் எழுப்பிய எதிர்வினையின் பின்னணியில், அதிகாரிகள் மீண்டும் குளத்தில் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில், அமீபா நுண்ணுயிர்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது மூன்று குழந்தைகளின் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால், அவர்களை திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றி, சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்கள் அவர்கள் அமீபிக் மேனிஙோசெபாலிடிஸ் எனப்படும் மோசமான நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாதிப்புக்குக் காரணமான கோயில் குளம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. ஆண்டுதோறும் திருவிழா காலங்களில் மட்டுமே சுத்தம் செய்யப்படும் என தெரிய வருகிறது. தற்போது, பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் குளத்திற்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு, குளத்தைச் சுற்றி தடுப்புக் கயிறுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், எச்சரிக்கை பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கைகள் எடுக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.