மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலைமீது அமைந்துள்ள புகழ்பெற்ற சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர் தர்கா வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் தகவல், நேரடியாகத் தர்கா நிர்வாகத்திற்கோ அல்லது காவல் துறைக்கோ வராமல், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மின்னஞ்சல் கிடைத்தவுடன் மாவட்ட நிர்வாகம் உடனடியாக காவல் துறையை உஷார்படுத்தியது.
மிரட்டலைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்புக் குழு (Bomb Detection and Disposal Squad – BDDS) நிபுணர்கள் உடனடியாகத் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு விரைந்தனர்.
அவர்கள், மோப்பநாய்கள் உதவியுடன் தர்கா வளாகம், அதன் நுழைவுப் பகுதிகள், வழிபாட்டு இடங்கள், மற்றும் மிரட்டல் விடுக்கப்பட்ட இடத்தை ஒட்டியுள்ள மலைப்பகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.இந்தப் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பிய நபர் அல்லது குழுவினரைக் கண்டறியும் பணியில் சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தற்போது வரை, சோதனையில் எந்தவிதமான சந்தேகத்திற்கிடமான பொருளோ அல்லது வெடிகுண்டோ கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும், பாதுகாப்பு கருதி சோதனைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















