திருச்சி | காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

திருச்சி மாநகரம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த ராமன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பயின்று வந்தார். நேற்று முன்தினம், அவர் தனது நண்பர்களான விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீன் ஆகியோருடன் கம்பரசம்பேட்டை அருகே உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணைக்கு குளிக்கச் சென்றிருந்தார்.

குளிக்கும்போது நான்கு பேரும் ஆழம் அதிகம் உள்ள பகுதியில் சென்றதால் தண்ணீரில் சிக்கிக் கொண்டு தத்தளிக்கத் தொடங்கினர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, விக்னேஷ், பிரசன்னா மற்றும் பிரவீனை பத்திரமாக மீட்டனர். ஆனால் ராமன் மட்டும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

தகவல் அறிந்ததும், திருச்சி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேடும் நடவடிக்கையின் பிறகு, 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே, பாதிரகுடி என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ராமனின் உடல் மிதந்த நிலையில் மீட்கப்பட்டது.

தருணத்தில் திருக்காட்டுப்பள்ளி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு, திருச்சி தீயணைப்பு குழுவினருக்கு அறிவித்தனர். பின்னர் ராமனின் உடல் அவரின் குடும்பத்தாருக்கு ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version