வந்தே பாரத் ரயிலில் இருக்கை மாற்ற மறுத்த பயணியை தாக்கிய பாஜக எம்எல்ஏ – வைரல் வீடியோவால் பரபரப்பு !

ஜான்சி (உ.பி.) : நாட்டின் முக்கிய நகரங்களை விரைவாக இணைக்கும் நோக்கில் இயக்கப்படும் ‘வந்தே பாரத்’ ரயில்கள், பல்வேறு மாநிலங்களில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், வந்தே பாரத் ரயிலில் பயணியொருவரை பாஜக எம்எல்ஏ தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 19ஆம் தேதி, டெல்லியில் இருந்து போபாலுக்கு பயணித்த வந்தே பாரத் ரயிலில், ஒரு பயணி, ஜன்னலோர இருக்கையை முன்பதிவு செய்து அமர்ந்திருந்தார். அப்போது உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜீவ் சிங் தனது குடும்பத்துடன் பயணித்துள்ளார்.

எம்எல்ஏ ராஜீவ் சிங், அந்த ஜன்னலோர இருக்கையை தனது குடும்பத்தினருக்கு மாற்றித் தருமாறு கேட்டதாக கூறப்படுகிறது. பயணி மறுத்ததையடுத்து, அவர் கடும் கோபமடைந்து, தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அந்த பயணியை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பயணியின் முகத்தில் காயம் ஏற்பட்டு, மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் தேசிய பேச்சாளர் சுப்ரியா ஷ்ரினேட், “பயணியில் இருந்து ஒரு ஜன்னல் இருக்கையைப் பெற முடியாததால் பாஜக எம்எல்ஏ தாக்குதல் நடத்தியுள்ளார்” என்றும், “அவர் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு நெருக்கமானவர்” என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தற்போது வரை பாஜக சார்பில் எந்தவொரு விளக்கமும் வெளியாகவில்லை.

இதேவேளை, ஜான்சி ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விபுல் குமார் ஸ்ரீவஸ்தவா, “சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்படும். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்துள்ளார்.

அத்துடன், எம்எல்ஏ ராஜீவ் சிங், பாதிக்கப்பட்ட பயணியையே தனது குடும்பத்தினரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி ஒரு புகாரை (NCR) தாக்கல் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வரை பாதிக்கப்பட்ட பயணியிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் பெறப்படவில்லை. புகார் வந்தவுடனே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version