“அரசியலுக்கு வந்தவுடன் முதல்வர் ஆகிறதெல்லாம் சினிமாவில் தானே சாத்தியம் !” – விஜயை குறித்த ரோஜாவின் மறைமுக விமர்சனம்

திரைப்படத்திலும், அரசியலிலும் சம அளவு பேசப்படும் நடிகை–அமைச்சர் ரோஜா, தமிழ்நாடு அரசியல் சூழலைப் பற்றியும், தவெக தலைவர் விஜயை குறித்தும் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

12 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் லெனின் பாண்டியன் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வரும் ரோஜா, பட வெளியீட்டை முன்னிட்டு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

சினிமா மற்றும் அரசியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியலுக்கு வந்தவுடன் நேராக முதல்வர் ஆகிறதெல்லாம் சினிமாவில் மட்டும் தான் முடியும்; அரசியலில் அது சாத்தியமே இல்லை” என கூறினார். இந்த கருத்து, சமீபத்தில் தவெக தலைவர் விஜயின் நடவடிக்கைகளை குறிவைத்து கூறப்பட்டதாக அரசியல் கண்காணிப்பர்கள் கருதுகின்றனர்.

விஜயின் நேரடி திடீர் சந்திப்புகளைச் சுற்றிய சர்ச்சைகள் குறித்து ரோஜா கூறியதாவது:
“நேரில் சென்றதால் பிரச்சனை என்றார்கள்; பிறகு நேரில் செல்லவில்லை என்றாலும் அதுவே விமர்சனமாகிறது. அரசியலில் யாரைப் பற்றியும் தேடித்தேடி குறை சொல்லும் போக்கு உள்ளது,” என்று அவர் தெரிவித்தார்.

அதேசமயம், தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசும்போது, “அரசு எத்தனை திட்டங்களை கொண்டு வந்தாலும், அது மட்டும் போதாது. தேர்தலுக்கு முன் இரண்டு மாதங்களில் உருவாகும் அரசியல் சூழல்தான் மக்கள் முடிவை தீர்மானிக்கும்,” என ரோஜா பகர்ந்தார்.

ரோஜாவின் இந்த கருத்துகள், தமிழக அரசியல் சூழலிலும், விஜயின் அரசியல் பயணத்திலும் புதிய விவாதங்களுக்கு வழிவகுக்கும் என பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Exit mobile version