விஜய் அகந்தையுடன் பேசுகிறார்; பின்னணியில் பாஜக உள்ளது: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கடும் விமர்சனம்
திருநெல்வேலி: “நடிகர் விஜய், பாஜக மற்றும் அமித்ஷாவின் பின்புலத்தில் இருக்கும் தைரியத்தில் அகந்தையுடன் முதலமைச்சரை மிரட்டும் தோனியில் பேசுகிறார்” என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நடிகர் விஜய் மீது கடும் தாக்குதல்:
நடிகர் விஜய் தமிழக அரசை விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அப்பாவு, “நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்திருக்கிறார், சினிமாவில் பேசுவது போல் பேசுகிறார். அவருக்கு கொஞ்சம் அகந்தை அதிகமாக இருக்கிறது. மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. அமித்ஷா, குஷ்பு மற்றும் ஆனந்த் போஸ் ஆகியோரிடம் இது தொடர்பாகப் பேசியதாகப் பல பத்திரிகை செய்திகள் வந்துள்ளன.
முதலமைச்சரை மிரட்டும் தோனியில் அவர் பேசும்போதே, விஜய்யை பாஜகதான் இயக்குகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமருக்கு இருக்கும் புரோட்டோகால் வேறு, விஜய்க்கான புரோட்டோகால் வேறு. பிரதமர் மற்றும் முதல்வர் பற்றிப் பேசும்போது கண்ணியத்துடனும், வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது கவனத்துடனும் இருக்க வேண்டும்,” என்றார்.
“தமிழக வெற்றி கழகத்தைக் கண்டு ஆளுங்கட்சி பயப்படுகிறதா?” என்ற கேள்விக்கு, “பயப்படுபவர்களுக்குத்தான் பயம் வர வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் யாருக்கும் பயப்படவில்லை. இவரைப் போல ‘தலைவா’ படப் பிரச்சனைக்காக மூன்று நாட்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவர்கள் நாங்கள் அல்ல,” என்று காட்டமாகப் பதிலளித்தார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசு மீது விமர்சனம்:
பிரதமர் மோடியின் பேச்சு குறித்துக் கருத்து தெரிவித்த அவர், “ஆண்டுக்கு 2.5 லட்சம் கோடி ரூபாய் சலுகை கிடைத்திருப்பதால் மக்கள் சேமிப்பு உருவாகும் எனப் பிரதமர் சொல்லியுள்ளார். அப்படியானால், இத்தனை ஆண்டுகள் சேமித்த 20 லட்சம் கோடி ரூபாயை அவர் எங்கே வைத்திருக்கிறார்? மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகக் கூடாது,” என்று கேள்வி எழுப்பினார்.
ஆளுநர் குறித்து கருத்து:
ஆளுநர் குறித்த கேள்விக்கு, “ஆளுநர் எதனையும் தெரியாமல், யாரோ எழுதிக் கொடுப்பதைப் பேசுகிறார், அய்யோ பாவம்,” என விமர்சித்தார்.
தமிழக அரசின் குடிநீர் திட்டங்கள்:
தமிழக அரசின் திட்டங்கள் குறித்துப் பேசிய அப்பாவு, “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 831 கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கி, அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, குட்டம் முதல் ராதாபுரம் வரையிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது,” என்றார்.
பாமக விவகாரம்:
பாமக கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் குறித்த கேள்விக்கு, “சட்டமன்றம் கூடும்போது அதைப் பார்த்துக் கொள்ளலாம்,” என்று கூறி தனது பேட்டியை முடித்துக்கொண்டார்.