தரங்கம்பாடி அருகே புகழ்பெற்ற அனந்தமங்கலம் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயர் சுவாமி வீதி உலா வீடுகள் தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி உலகில் இங்கு மட்டுமே உள்ளது.
மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம் ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது. ஆஞ்சநேயர் இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்து. திரும்பி வரும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம் என்றும் அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு தற்போது மறுவி அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு. எனவே இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் பல்வேறு சிறப்புகளை உடைய இவ்வாலயத்தில் இன்று அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காலையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர் இரவு சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் சுவாமி வீதி உலா நடைபெற்றது இதில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் மேலும் வீடுகள் தோறும் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

















