மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா -அலங்கார தேர்பவனி

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத் திருவிழா கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தேர்பவனி நடைபெற்றது. மயிலாடுதுறை மறைவட்டஅதிபர் பேரருட்திரு.தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் “வாழ்வுக்கு வழிகாட்டியவர்” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி, பட்டுக்கோட்டை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.அந்தோணிசாமி அடிகளார் மறையுரையாற்றினார்.

இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்கள் பாதுகாக்கப்படவும், விவசாயம் செழிக்கவும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.

தொடர்ந்து, புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய அலங்கார தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இன்னிசை முழங்க, வானவேடிக்கையுடன் தொடங்கிய தேர்பவனி அரசு மருத்துவமனை சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.

திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், மரியாயின் சேனையினர், பாடகற்குழுவினர், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version