சென்னை : அரசு நிதியில் கட்டப்பட்ட ஒரு புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறக்கப்பட்ட சில நாள்களில் மேல்மாடி இடிந்துவிழுந்த சம்பவம் தொடர்பாக, தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் ஒன்றியத்திற்குள் வரும் சூரியனார் கோவில் ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு, கடந்த ஜூன் 16ம் தேதி தமிழக முதல்வரால் திறக்கப்பட்டது.
இந்நிலையில், கட்டிடம் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே, இரு அறைகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததாக அண்ணாமலை குற்றம்சாட்டினார். இதனை அவசரமாக “பேட்ச் வொர்க்” செய்து மறைக்க முயற்சித்ததாகவும், தற்போது மீண்டும் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஒட்டுமொத்தமாக தரமற்ற முறையில் கட்டப்பட்ட கட்டிடத்தை முதல்வர் திறந்து வைத்திருக்கிறார். அதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் எந்த ஊழியரும் அந்த அறையில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால் இப்படி இடிந்து விழும் கட்டிடத்தில் ஊழியர்கள் எப்படி வேலை செய்ய முடியும்?” என அண்ணாமலை கேள்வியெழுப்பினார்.
மேலும், கட்டிடத்தை கட்டிய ஒப்பந்ததாரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மக்கள் பயன்பாட்டிற்கு முன்னதாக கட்டிடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.