மோதல் முடிவுக்கு வருமா ? ராமதாஸை சந்தித்த அன்புமணி

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பா.ம.க.) கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சித் தலைவருமான அன்புமணிக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலவி வரும் உள்நடப்புச் சிக்கல் தீர்வுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில், ராமதாஸை நேரில் சந்தித்து அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் சுமார் அரைமணி நேரம் பேசினர். இந்த சந்திப்பு, இருவருக்குமிடையிலான கட்சி நிலைப்பாடுகளில் சமரசம் வரக்கூடிய நிலையை உருவாக்குமா என்ற நம்பிக்கையை தொண்டர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

கடந்த சில வாரங்களாக இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வந்தனர். கடந்த வாரம் ராமதாஸ் நடத்திய முக்கிய கூட்டத்தில், 108 மாவட்ட செயலர்களில் 13 பேரே கலந்து கொண்டது கட்சியினுள் உள்ள பிரிவினையை வெளிப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சில மாவட்டச் செயலர்கள் மற்றும் மாநிலப் பொருளாளர் உட்பட பலரை ராமதாஸ் நீக்கி, புதிய நியமனங்களை செய்திருந்தார்.

மேலும், அண்மையில் அளித்த பேட்டியில், “தலைமைத்திறன் இல்லாதவர்” என்ற கடுமையான விமர்சனங்களை அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் கூறியது கட்சியின் நிலையை மேலும் கிளர்ச்சிக்கு தள்ளியது.

இதற்கிடையே, ராமதாஸை சந்தித்து ஆடிட்டர் குருமூர்த்தியும், முன்னாள் சைதை மேயரும் அ.தி.மு.க.வின் மூத்த தலைவருமான துரைசாமியும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version