2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி; நிறுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மீட்கப்படும்: பல்லடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணன் அதிரடி முழக்கம்!

திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டம், பல்லடம் வடக்கு ஒன்றியம் சார்பில் அண்ணா திமுகவின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரம்மாண்ட முப்பெரும் விழா நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு ஒன்றியச் செயலாளருமான கரைப்புதூர் அ. நடராஜன் ஏற்பாட்டில், கரைப்புதூரில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் – காமாட்சியம்மன் திருக்கோவில் முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில், நூற்றுக்கணக்கான ஏழை எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கரைப்புதூர் தேவராஜ், ஒன்றிய பேரவை உறுப்பினர் ஸ்ரீ லட்சுமி நகர் ரமேஷ் (எ) குழந்தைவேலு மற்றும் கிளைச் செயலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தச் சிறப்பு வாய்ந்த முப்பெரும் விழாவிற்குத் தலைமை தாங்கிய அண்ணா திமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கரைப்புதூர், ஏ.டி. காலனி, எம்.ஏ. நகர் மற்றும் லட்சுமி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குப் புத்தாடைகள் மற்றும் பெண்களுக்கான வீட்டு உபயோகப் பொருட்களை (ஹாட்பாக்ஸ்) வழங்கினார். மேலும், இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் கிரிக்கெட் மட்டைகள், பந்துகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை அவர் வழங்கி உற்சாகப்படுத்தினார். “அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்களுக்காக உழைக்கும் ஒரே இயக்கம் இதுதான்” என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய உடுமலை ராதாகிருஷ்ணன், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் குறித்து மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களுக்கான தாலிக்குத் தங்கம், விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் உழைக்கும் பெண்களுக்கு வழங்கப்பட்ட மானிய விலையிலான ஸ்கூட்டர் திட்டம் போன்றவை முடக்கப்பட்டிருப்பதாக அவர் சாடினார். மேலும், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டி மற்றும் மடிக்கணினித் திட்டங்கள் நிறுத்தப்பட்டது மாணவர்களின் கல்வி வளர்ச்சியைப் பாதித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், தற்போது நிறுத்தப்பட்டுள்ள அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் உடனடியாகத் தொடங்கப்படும். தேர்தல் முடிந்த கையோடு குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். அதுமட்டுமின்றி, கிராமப்புறங்களில் வீடில்லாத ஏழைகளுக்குத் தனி வீடுகளும், நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீடுகளும் கட்டித் தரப்படும். தமிழகத்தின் பொற்கால ஆட்சியை மீண்டும் கொண்டு வர வரும் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்து ஆதரவு தர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இந்த விழாவில் பொதுக்குழு உறுப்பினர் தண்ணீர் பந்தல் ப. நடராஜன், வக்கீல் பொன்னுசாமி, தியாகு, சோனைமுத்து, பழனிசாமி, கனகராஜ், திருநாவுக்கரசு, அசோக், சுபாஷ், செம்மிபாளையம் பரமசிவம், நகுல் பீஷ்மர், அய்யம்பாளையம் பாலசுப்பிரமணியம், கலைச்செல்வி, அம்மு, ஈஸ்வரன், முன்னாள் வார்டு உறுப்பினர் ஜோதிமணி, முத்துக்குட்டி, சபீன், மூர்த்தி, பொன் நகர் முருகன், வி.பி.ஜி. நகர் ராமமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஆர். நகர் குமார், மயில்சாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Exit mobile version