அதிமுக தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ளது. கூட்டணிக்கு கட்சிகளை கூவி கூவி அழைக்கும் நிலைக்கு போய்விட்டது என்று அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக பலவீனமாகி விட்டது. விஜய்யை கூட்டணிக்கு அழைத்துவிடலாம் என நினைத்தனர். ஆனால் அவர் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டதால், அவர்கள் விரக்தியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர்,” என்று தெரிவித்தார்.
“விஜய்யை ‘வா… வா…’ என்று கூவி கூவி பார்த்தார்கள். கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை என்றால் திமுக தவெகவை அழித்துவிடும் என்று சொல்லி பயமுறுத்த முயன்றார்கள். பவன் கல்யாண், சிரஞ்சீவியையும் சொல்லி பார்த்தார்கள். ஆனால் விஜய் அமைதியாக இருந்து தெளிவாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அதனால் அதிமுக வட்டாரங்களில் விரக்தி ஏற்பட்டுள்ளது.
1972ஆம் ஆண்டு தொடங்கிய அதிமுக, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையில் மொத்தம் 33 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. அப்போது கூட்டணி கட்சிகள் அவர்களை தேடி வந்தார்கள். ஆனால் இப்போது அதிமுக தான் கட்சிகளை கூவி கூவி கூட்டணிக்கு அழைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. ராயப்பேட்டை அலுவலகம் முன் அம்மா, எம்ஜிஆர் படங்களை காட்டி ‘வாங்க வாங்க’ என்று கூப்பிடுவது போல இருக்கிறது. இது அதிமுக பலவீனத்தின் வெளிப்பாடு,” என்றார்.
“நான் கொடநாடு வழக்கில் யாரையும் குற்றம்சாட்டவில்லை. பழனிசாமி ஆட்சிக்காலத்தில் அங்கு தடயங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வந்தது என்பதை மட்டுமே சொன்னேன். அதைத்தான் சிலர் தவறாக புரிந்து அரசுத் தகவல் ரெக்கார்டை கிழித்ததாக பரப்பினர். அது உண்மை அல்ல. அம்மா அவர்கள் கட்சியில் உள்ள குற்றச்சாட்டுகளை தனிப்பட்ட பச்சை கலர் பைலில் வைத்திருந்தார்கள். அதுதான் நான் குறிப்பிட்டது. அரசு ரெக்கார்டு அல்ல.
சின்னம்மா (சசிகலா) சொல்வது ஒரே விஷயம் அதிமுக ஓரணியில் இணைய வேண்டும் என்பதுதான்,” என்று தினகரன் தெரிவித்தார்.
















