அகமதாபாத் விமான விபத்து : கருப்புப் பெட்டி மீட்பு – உண்மையான காரணம் விரைவில் வெளிவரும் ?

அகமதாபாத் :

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பிடித்து நொறுங்கியது. கடந்த 12ஆம் தேதி நிகழ்ந்த இந்த பேரழிவில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி உயிருடன் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து, அகமதாபாத் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் விமானம் மோதியதன் காரணமாக, மேலும் ஏழு மாணவர்களும் உயிரிழந்தனர். இந்த துயர நிகழ்வு நாடு முழுவதும் அதிர்ச்சியையும், கவலையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன ?

விமானம் தரையிலிருந்து பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே குறைந்த உயரத்தில் இருந்து விழுந்தது. இதற்கான காரணமாக தொழில்நுட்ப கோளாறு, என்ஜினில் பறவை மோதி இருக்கலாம் என்பதும், லேண்டிங் கியர் செயலிழந்திருக்கலாம் என்பதும் உள்பட பல யூகங்கள் கிளம்பியுள்ளன. இருப்பினும், இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்தநிலையில், விமானத்தின் கருப்புப் பெட்டி தற்போது மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான உண்மையான காரணத்தைத் தெரிந்துகொள்ள இது முக்கியக் கருவியாக இருக்கிறது.

கருப்புப் பெட்டி என்றால் என்ன ?

கருப்புப் பெட்டி என்பது விமானத்தில் இடம்பெறும் அனைத்து முக்கிய தரவுகளையும் பதிவு செய்யும் மின்னணு சாதனம். இது உண்மையில் கறுப்பு நிறத்தில் அல்ல; துருவோலியை போன்ற ஆரஞ்சு நிறத்தில் ஒளிரும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. 1954ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய விஞ்ஞானி டேவிட் வாரன் இதனை கண்டுபிடித்தார்.

இரண்டு முக்கிய சாதனங்கள் :

டிஜிட்டல் விமான தரவு ரெக்கார்டர் (DFDR) – விமானத்தின் உயரம், வேகம், எரிபொருள் அளவு, திசை போன்றவற்றை பதிவு செய்கிறது.

காக்பிட் குரல் ரெக்கார்டர் (CVR) – விமானம் புறப்படும் முன், பறக்கும் போது, காக்பிட்டில் பைலட்டுகள் இடையே நடந்த உரையாடல்கள் மற்றும் ஒலிகளைக் கடைசி 2 மணிநேரத்திற்கு பதிவு செய்கிறது.

    விபத்துக்குப் பிறகு கருப்புப் பெட்டி 30 நாட்கள் வரை நொடிக்கு ஒருமுறை அல்ட்ராசவுண்ட் சமிக்ஞை அனுப்பும் திறன் கொண்டது. மிகுந்த வெப்பம், தண்ணீர், சுழற்சி அழுத்தம் போன்ற சோதனைகளைத் தாங்கும் வகையில் இது தயாரிக்கப்படுகிறது.

    15 நாட்கள் ஆய்வு

    கருப்புப் பெட்டியில் உள்ள தரவுகளை மீட்டு, விபத்துக்கான சரியான காரணங்களை அறிய சில நாட்கள் ஆகலாம். பொதுவாக 15 நாட்களுக்குள் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்படும்.

    என்ன எதிர்பார்க்கலாம் ?

    தற்போது மீட்கப்பட்ட கருப்புப் பெட்டி ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விமானத்துறை அதிகாரிகள் இதன் அடிப்படையில் விபத்துக்கான உண்மையான காரணங்களை விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Exit mobile version