நாகையில் 100 ஆண்டுகளுக்குப் பிறகுவீதிஉலாவந்தஅகஸ்தீஸ்வரர் – பக்திவெள்ளத்தில்மிதந்தவெளிப்பாளையம்!

நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஆன்மீக வரலாற்றில் ஒரு பொற்கால நிகழ்வாக, சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெளிப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சுவாமி – ஆனந்தவள்ளி அம்மன் திருக்கோவில் தேரோட்டம் ஒரு நூற்றாண்டு இடைவெளிக்குப் பிறகு இன்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. கடந்த 100 ஆண்டுகளாகப் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த இந்தத் தேரோட்ட வைபவம், நடப்பு 2026-ஆம் ஆண்டு மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இதற்காகப் பிரத்யேகமாகப் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலைநயத்துடன் புதிதாகக் கட்டமைக்கப்பட்ட மரத்தேர், இன்று காலை நிலையை விட்டுப் புறப்பட்டது. முன்னதாக, அலங்கரிக்கப்பட்ட புதிய தேரில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். வேத மந்திரங்கள் முழங்க, புதிய தேருக்குத் தேங்காய் உடைத்து, மகா தீபாராதனையுடன் பூஜைகள் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ‘ஹர ஹர மகாதேவா’ என்ற முழக்கத்துடன் தேரோட்டம் தொடங்கியது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளிப்பாளையம் பகுதியில் திரண்டனர். 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் தேரோட்டம் என்பதால், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். வண்ணத் தோரணங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேர், வெளிப்பாளையத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தபோது, ஒவ்வொரு வீதியிலும் பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு, சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். மேளதாளங்கள், நாதஸ்வர இசை மற்றும் சிவ வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இந்த வீதி உலா, நாகை நகரத்தையே பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. ஒரு நூற்றாண்டு கால ஏக்கம் நீங்கி, தங்கள் ஊர் வீதிகளில் ஈசன் தேரில் வருவதைக் கண்ட முதியவர்கள் பலரும் கண்கலங்க வழிப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்த சிறப்பான ஏற்பாடுகளால், இந்த வரலாற்றுத் தேரோட்டம் எவ்வித இடையூறுமின்றி மிகச் சிறப்பாக நிறைவுற்றது.

Exit mobile version