மதுரை : நடிகர் சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘மாமன்’ திரைப்படம், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்தவாரம் திரையரங்குகளில் வெளியானது. இதே நாளில் சந்தானம் நடித்த ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’, யோகிபாபுவின் ‘ஜோரா கைய தட்டுங்க’ உள்ளிட்ட படங்களும் வெளியானன.
‘மாமன்’ திரைப்படம் வெற்றி பெற வேண்டுமென விரும்பிய ரசிகர்கள் சிலர், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு, தங்களது பிரார்த்தனையை வெளிப்படுத்தினர். “சூரி ஒரு மண்ணின் மைந்தன். அவரது படம் பெரிய வெற்றி பெற வேண்டும்,” என்றும், “படத்தை பார்க்க ஆவலாக உள்ளோம்,” என்றும் ஒருவர் கூறினார்.
இந்நிலையில், இந்த செயலை கண்டு அதிர்ச்சியடைந்த சூரி, கடும் பதிலளித்துள்ளார். “நல்ல கதையாக இருந்து, நன்றாக படம் எடுத்திருந்தாலே அது ஓடும். மண் சோறு சாப்பிட்டால் படம் ஓடிவிடுமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இது ரொம்ப முட்டாள்தனமான செயல். இப்படிச் செய்தவர்கள் என் தம்பிகளும் இல்லை; ரசிகர்களாக இருக்கத் தகுதியும் இல்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாமலே இன்று நான் இந்த நிலைக்கு வந்துள்ளேன். அந்த நேரத்தில் யாராவது எனக்காக ஒரு தண்ணீர் கூட வாங்கித் தந்திருந்தால், அதுவே பெரிய உதவியாக இருந்திருக்கும். 4 பேருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுத்திருந்தால் நான் மனதார சந்தோஷப்பட்டிருப்பேன்,” என்றும் சூரி தெரிவித்துள்ளார்.
சூரியின் இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.