பக்திப் பரவசத்தில் ஆடிப்பூரம் – 1008 ‘குட்டி ஆண்டாள்கள்’ திரண்ட அபூர்வ சங்கமம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாராகவும் திகழும் ஆண்டாள் நாச்சியாரைப் போற்றும் வகையில், “ஆண்டாள் சங்கமம்” எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அகத்தியர் தமிழ்ச் சங்கம் சார்பில் “பெண்மையைப் போற்றுவோம் – கோதையின் பாதையில்” என்ற உன்னதக் கருப்பொருளை முன்னிறுத்தி இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளிச் செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கிய இந்த விழாவிற்கு, அகத்தியர் தமிழ்ச் சங்க நிறுவனர் ரேணுகா தேவி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்வாக, எல்.கே.ஜி முதல் மேல்நிலை வகுப்பு வரை பயிலும் சுமார் 1008 மாணவிகள், ஆண்டாள் நாச்சியாரைப் போலவே கொண்டையிட்டு, மலர் மாலைகள் சூடி, கிளி ஏந்தி எழிலார்ந்த ஆண்டாள் வேடமிட்டுப் பள்ளி வளாகத்தில் திரண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தின் அடையாளமான ஆண்டாளின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக, இந்த 1008 மாணவிகளும் ஒரே குரலில் ‘திருப்பாவை’ பாடல்களைப் பாடி, கூடியிருந்த பக்தர்களையும் பொதுமக்களையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினர். இளம் தளிர்களின் மழலை மொழியில் ஒலித்த “மார்கழித் திங்கள்” பாடல்கள், அப்பகுதி முழுவதையும் ஆன்மீக மணம் வீசச் செய்தது.

பெண்மையின் உயர்வையும், தமிழுக்கு ஆண்டாள் ஆற்றிய மகத்தான பங்களிப்பையும் இன்றைய இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்று விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பள்ளித் தலைவர் மலையன், நிர்வாகக் குழு உறுப்பினர் ஸ்ரீதரன், முக்கிய அர்ச்சகர் முத்து பட்டர் உள்ளிட்டப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு மாணவிகளை வாழ்த்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நகரமே ஸ்தம்பிக்கும் வகையில் நடைபெற்ற இந்த “ஆண்டாள் சங்கமம்”, தமிழகத்தின் பண்பாட்டு அடையாளத்தை நிலைநிறுத்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

Exit mobile version