வெளிநாட்டு வேலை தருவதாக ரூ. 35.40 லட்சம் மோசடி கும்பகோணம் டிராவல்ஸ் உரிமையாளர் அதிரடி கைது!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைப்பதாகக் கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் வில்சன் (45) என்பவர், ‘யூனிவர்சல் டூர்ஸ் அண்டு டிராவல்ஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் செம்பியவரம்பல் பகுதியைச் சேர்ந்த செல்வம் (60) என்பவர் கடந்த 2019 முதல் 2020 வரை இரண்டு ஆண்டுகள் ஊழியராகப் பணியாற்றி வந்தார். பின்னர் உடல்நலக் குறைவு காரணமாக அவர் பணியிலிருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில், தனது முன்னாள் ஊழியரான செல்வத்தைத் தொடர்பு கொண்ட ஆல்பர்ட் வில்சன், வெளிநாடுகளில் நல்ல ஊதியத்துடன் கூடிய வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும், தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கூறும்படியும் கேட்டுள்ளார். உரிமையாளரின் வார்த்தையை நம்பிய செல்வம், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என 6 பேரைத் திரட்டியுள்ளார். அவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தலா 1.50 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 9 லட்சம் ரூபாயைப் பெற்று கடந்த 2021-ம் ஆண்டு ஆல்பர்ட் வில்சனிடம் வழங்கியுள்ளார். ஆனால், பணம் பெற்று நீண்ட நாட்களாகியும் யாருக்கும் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் செல்வத்திற்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்துள்ளனர்.

தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வம், இது குறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் துரிதமாகச் செயல்பட்ட போலீசார், நேற்று முன்தினம் இரவு ஆல்பர்ட் வில்சனை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. செல்வம் மூலம் பெற்ற 9 லட்சம் ரூபாய் மட்டுமன்றி, இதே பாணியில் மொத்தம் 22 நபர்களிடம் இருந்து சுமார் 35.40 லட்சம் ரூபாய் வரை அவர் மோசடி செய்திருப்பது அம்பலமானது. வெளிநாடு செல்ல ஆசைப்படுபவர்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மேலும் பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இது போன்ற போலி ஏஜெண்டுகளை நம்பி பொதுமக்கள் பணத்தை இழக்க வேண்டாம் என்றும், வெளிநாடு வேலைக்குச் செல்பவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது. கைது செய்யப்பட்ட ஆல்பர்ட் வில்சன் மீது மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Exit mobile version