வானில் பறந்த விமானங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள், விமானப் பயணிகளில் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் ஏர் இந்தியா மற்றும் சவுதி ஏர்லைன்ஸ் விமானங்களில் நேர்ந்த சம்பவங்கள், பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்புகின்றன.
ஜூன் 12ஆம் தேதி, ஆமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 30 வினாடிகளிலேயே திடீரென கீழே விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பயணிகள் உள்பட 274 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே அதிரவைத்தது.
இதனையடுத்து, ஹாங்காங்கில் இருந்து டில்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விமானத்தில் நடுவானில் பறக்கும் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. பைலட் உடனடியாக நிலைமையை கட்டுப்படுத்தி, விமானத்தை மீண்டும் ஹாங்காங்கிற்கே திருப்பிச் சென்று பாதுகாப்பாக தரையிறக்கினார். இதனால் பயணிகள் உயிர்தப்பினர்.
மற்றொரு சம்பவமாக, சவூதி அரேபியாவில் இருந்து 250 ஹஜ் பயணிகளுடன் வந்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம், லக்னோவில் தரையிறங்கும் போது சக்கரத்தில் ஏற்பட்ட உராய்வால் தீப்பொறி பறந்தது. ஆனால், விமானி கவனமாக விமானத்தை தரையிறக்கி, தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
ஏர் இந்தியா விபத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியாக விமானங்களில் ஏற்படும் கோளாறுகள், பயணிகள் மத்தியில் பயண பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரிக்கச் செய்துள்ளன.