விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முடுக்கன்குளம் பகுதியில் இன்று அதிவேகமாக வந்த பால் டேங்கர் லாரி மோதி 7 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கம்போல் மேய்ச்சலுக்காகக் கூட்டமாகச் சாலையோரம் சென்று கொண்டிருந்த மாடுகள் மீது, எதிர்பாராத விதமாகப் பின்னால் வந்த பால் டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் பலத்த காயமடைந்த 7 மாடுகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தன. மேலும், இந்த விபத்தில் 5-க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றன.
விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், மாடுகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கால்நடை உரிமையாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்த மாடுகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கக் கால்நடை மருத்துவக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய மாடுகள் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்ததைக் கண்டு உரிமையாளர்கள் கண்ணீர் விட்டு அழுதது காண்போரை நெகிழச் செய்தது. சாலைகளில் அதிவேகமாகச் செல்லும் வாகனங்களால் இது போன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், முடுக்கன்குளம் போன்ற குடியிருப்பு மற்றும் கால்நடைகள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.














