பொள்ளாச்சியில் தேசிய சாலை பாதுகாப்பு ‘சீட் பெல்ட்’ அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுப் பேரணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், சாலை விபத்துகளைக் குறைக்கவும், போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா நேற்றுமுன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ‘சீட் பெல்ட்’ அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரம்மாண்ட விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் தொடங்கிய இந்தப் பேரணிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செழியன் தலைமை வகித்தார். மோட்டார் வாகன ஆய்வாளர் (பொ) சசிக்குமார், அரசுப் போக்குவரத்துப் பணிமனை பயிற்சிப் பள்ளி உதவிப் பொறியாளர் சுப்ரமணியம் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர்.

பொதுமக்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனையாளர்கள் திரளாகப் பங்கேற்ற இந்தப் பேரணியில், சாலைப் பாதுகாப்பு குறித்த பல்வேறு முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, வாகனங்களை இயக்கும்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவது, ப்ளூடூத் போன்ற உபகரணங்கள் மூலம் உரையாடுவது போன்றவை கவனச் சிதறலை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தாக முடியும் என எச்சரிக்கப்பட்டது. சீட் பெல்ட் அணியாமல் செல்வது மற்றும் அதிவேகமாக வாகனங்களை ஓட்டுவது குறித்துக் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், சாலை சந்திப்புகள் மற்றும் வளைவுகளில் மற்ற வாகனங்களை முந்தக் கூடாது என்றும், கண் மறைவுப் பகுதிகளில் வேகத்தைக் குறைத்து எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செழியன் இது குறித்துத் தெரிவிக்கையில், வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றார். இதன் தொடர்ச்சியாக, அளவுக்கு அதிகமான பாரம் மற்றும் ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களைத் தணிக்கை செய்வது, ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்துதல், கருத்தரங்குகள் மற்றும் நடைப் பேரணிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. போக்குவரத்துச் சிக்னல்கள், சாலைக் குறிகள் மற்றும் வரைகோடுகளை மதித்து, வாகனத்தை எப்போதும் இடதுபுறமாகச் செலுத்த வேண்டும் என்ற அடிப்படை விதிகளை ஓட்டுநர்கள் முறையாகப் பின்பற்றினால் மட்டுமே விபத்தில்லாப் பொள்ளாச்சியை உருவாக்க முடியும் என அதிகாரிகள் இக்கூட்டத்தில் வலியுறுத்தினர்.

Exit mobile version