3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நரிக்குறவர் இன மாணவனுக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருந்தும் வேலை கிடைக்காததால் அந்த மாணவனுடைய திறமையை கண்டு பூரிப்படைந்த மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் மாணவனின் நலன் கருதி நீண்ட நேரம் காத்திருந்து மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி இதயநகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அதே இனத்தைச் சார்ந்த முத்தையா என்பவருடைய மகன் சஞ்சீவ் சிறு வயது முதலே கராத்தே குங்ஃபூ போன்ற கலைகளில் ஒன்றான ஹூசு விளையாட்டு போட்டியில் கைதேர்ந்த நிலையில் ஆசிய ஒலிம்பிக் போட்டியில் இந்த விளையாட்டுப் போட்டி இடம்பெற்றதால் அதில் கலந்து கொண்டு பல்வேறு நிலைகளில் நான்கு தங்கம் 2 வெள்ளி பதக்கங்களை வென்று வந்துள்ளார்.
இந்நிலையில் 3.5% இட ஒதுக்கீட்டில் இந்த மாணவனுக்கு அரசு விளையாட்டு துறை சார்ந்த வேலை கிடைக்க தகுதி இருந்தும் இன்று நடைபெற்ற அரசு வேலை நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை. ஆனால் இந்த மாணவனுடன் பங்கேற்ற பல மாணவர்கள் அரசு வேலை நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதனால் விரக்தி அடைந்த சஞ்சீவ் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுக்க சென்ற போது அங்கே மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் இருந்த மாவட்ட விளையாட்டு துறை அலுவலர் விஜயகுமாரி இந்த மாணவனின் சாதனைகளை அறிந்து பூரிப்படைந்து எப்படியாவது இந்த மாணவனின் நிலையை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை மனதில் கொண்டு அவருக்கு பல வேலை நிமித்தங்கள் இருந்தாலும் நீண்ட நேரம் காத்திருந்து மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் முடிந்து மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளை கொடுத்த பின்பு தனியாக சந்தித்து மாணவனுக்கு உதவி செய்ய பரிந்துரை செய்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவ சவுந்தரவல்லி இதுபோன்ற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கண்டிப்பாக நாம் உதவி செய்ய வேண்டும் உடனடியாக இது சார்ந்த கடிதத்தை வையுங்கள் நானும் அனுப்பி வைக்கிறேன் என்று மாவட்ட விளையாட்டு துறை அலுவலருக்கு உத்தரவிட்டு சென்ற சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றது.
