தாழம்பூரில் கோலாகலமான திரிசக்தி அம்மன் தேரோட்டம்: முப்பெரும் தேவியரை வடம் பிடித்து இழுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவச வழிபாடு!

: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம், நாவலூர் அடுத்த தாழம்பூர் கிருஷ்ணா நகரில் வீற்றுள்ள அருள்மிகு திரிசக்தி அம்மன் திருக்கோவிலின் மாசி மாத பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு, சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஞானசக்தியாக அன்னை சரஸ்வதியும், இச்சா சக்தியாக மகாலட்சுமியும், கிரியா சக்தியாகத் தாய் மூகாம்பிகையும் ஒரே இடத்தில் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில், தேரோட்டத்தைக் காணத் தாம்பரம், கேளம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ பெருவிழா கடந்த மார்ச் 21-ஆம் தேதி மங்கள இசை முழங்கக் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாம் நாளான மார்ச் 22-ஆம் தேதி, பொதுத்தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டி, முப்பெரும் தேவியர் முன்னிலையில் நடைபெற்ற ‘சிறப்பு கல்வி யாக வழிபாடு’ பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தினசரி பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை முப்பெரும் தேவியருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன.

தேரோட்டத்தை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்குப் பட்டு வஸ்திரங்கள் மற்றும் வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. பின்னர், அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தேரில் முப்பெரும் தேவியரும் ‘சித்திதா தேவி’ அலங்காரத்தில் எழுந்தருளினர். மாலை 4:30 மணியளவில் தொடங்கிய தேரோட்டத்தில், தாழம்பூர், நாவலூர், கேளம்பாக்கம் மற்றும் தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் “ஓம் சக்தி… பராசக்தி…” என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகள் வழியாக அசைந்தாடி வந்த தேரானது நிலைபெயர்ந்து மீண்டும் தேரடியை அடைந்தது. வழிநெடுகிலும் பக்தர்கள் தேரின் மீது மலர்களைத் தூவி வழிபட்டனர்.

திருவிழாவிற்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் அனைத்தையும் கோயில் ஸ்தாபகரும், ஆலய அறங்காவலருமான டாக்டர் கே.கே. கிருஷ்ணன் குட்டி சுவாமிகள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். இன்று மாலை நடைபெறவுள்ள விடையாத்தி உற்சவத்துடன் இந்த ஆண்டுக்கான மாசி பிரம்மோற்சவ விழா இனிதே நிறைவடைகிறது. பாதுகாப்புப் பணியில் தாலுகா போலீஸார் மற்றும் தன்னார்வலர்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Exit mobile version