நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயற்பியல் துறை சார்பில், மாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலான பிரம்மாண்ட அறிவியல் கண்காட்சி இன்று கல்லூரி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சரவணா தேவி தலைமையில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், நவீன உலகிற்குத் தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகளின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இளங்கலை மற்றும் முதுகலை இயற்பியல் துறை மாணவர்கள் தங்களது பாடப்புத்தக அறிவைச் செய்முறை விளக்கங்களாக மாற்றி, பல்வேறு புதுமையான அறிவியல் மாதிரிகளை உருவாக்கிப் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.
இந்தக் கண்காட்சியில் வருங்கால எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலம் (Hydrogen Fuel Cell), காற்று ஆற்றலை மின்னாற்றலாக மாற்றுதல் மற்றும் தானியங்கி சூரிய மின்கலம் போன்ற 50-க்கும் மேற்பட்ட முன்னோடிப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. குறிப்பாக, விண்வெளி நேர வளைவு (Space-Time Curvature), காந்த மிதவை (Magnetic Levitation), மற்றும் அழுத்த மின் விளைவு (Piezoelectric Effect) போன்ற கடினமான இயற்பியல் கோட்பாடுகளை எளிய மாதிரிகள் மூலம் மாணவர்கள் விளக்கினர். அன்றாட வாழ்வியலுக்குத் தேவையான மழைநீர் அலாரம், நவீன மழைநீர் சேகரிப்பு, தானியங்கி தெரு விளக்குகள், தண்ணீர்தொட்டி அலாரம் மற்றும் எலுமிச்சை மின்கலன் ஆகியவையும் இதில் இடம்பெற்றிருந்தன. மேலும், ஹாலோகிராம் தொழில்நுட்பம், கட்டிலா ஆற்றல் மற்றும் குளிரூட்டும் விளைவு குறித்த விளக்கங்கள் அனைவரையும் ஈர்த்தன.
இயற்பியல் துறைத் தலைவர் அனுராதா மற்றும் துறை ஆசிரியர்கள் இந்தத் தொழில்நுட்பத் திருவிழாவிற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இந்தக் கண்காட்சியைத் தமிழ், வேதியியல் மற்றும் வணிகவியல் துறைத் தலைவர்கள் நேரில் பார்வையிட்டு, மாணவர்களின் நுணுக்கமான விளக்கங்களைக் கேட்டறிந்தனர். காட்சிப்படுத்தப்பட்ட படைப்புகளில் புதுமை, சிக்கனம் மற்றும் சமூகப் பயன்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த படைப்புகள் நடுவர்களால் தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அரசு கல்லூரி மாணவர்களின் இந்த அறிவுசார் முன்னெடுப்பு, அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த ஆய்வாளர்களாக உருவெடுக்க ஒரு வலுவான அடித்தளமாக அமைந்தது எனப் பேராசிரியர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
















