திண்டுக்கல்லில் ரவுடி மற்றும் அவரது மனைவி அடுத்தடுத்து வெட்டிக்கொலை  பழிக்குப்பழியாக அரங்கேறிய கொடூரம்!

திண்டுக்கல் அருகே அடுத்தடுத்து நடந்த கணவன் மற்றும் மனைவியின் கொடூரக் கொலைகள் மாவட்டம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்த ஜேசுராஜ் (45) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மாயாண்டி ஜோசப் என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவர், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார். நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஜேசுராஜ் நத்தம் சாலை ஆர்.எம்.டி.சி நகர் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து காரில் வந்த மர்மக் கும்பல், ஆள் நடமாட்டம் உள்ள பகுதியிலேயே ஜேசுராஜை வழிமறித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் வாள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரைச் சரமாரியாக வெட்டியதுடன், அவரது தலையைச் சிதைத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடியது.

இந்த அதிர்ச்சி விலகும் முன்பே, யாகப்பன்பட்டியில் உள்ள ஜேசுராஜின் இரண்டாவது மனைவி தீபிகாவை (25) இலக்கு வைத்து மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது. ஜேசுராஜ் கொலை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவரது வீட்டு முன்பிருந்த தீபிகாவையும் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தது. ஒரே நாளில் கணவன் மற்றும் மனைவி இருவர் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திண்டுக்கல் காவல்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், 2024-ல் நடந்த மாயாண்டி ஜோசப் கொலைக்குக் காடாகவே இந்தப் பழிக்குப்பழி கொலைகள் அரங்கேறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலிஸார், உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாகப்பன்பட்டி மற்றும் ஆர்.எம்.டி.சி நகர் பகுதிகளில் மீண்டும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கக் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இத்தகைய துணிகரக் கொலைகள் திண்டுக்கல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version