சிங்கம்புணரி – எஸ்.புதூர் வட்டாரத்தில் வாகனப் பெருக்கத்தால் திணறும் குறுகிய சாலைகள் அகலப்படுத்த கோரிக்கை!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஆகிய இரண்டு ஒன்றியங்களில் உள்ள முக்கிய இணைப்புச் சாலைகள் பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி, மிகக் குறுகியதாகவே நீடிப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்தத் தாலுகாவைப் பொறுத்தவரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களை தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் முக்கிய நரம்புகளாகச் சில சாலைகள் உள்ளன. போக்குவரத்துப் பல மடங்கு அதிகரித்துள்ள இன்றைய சூழலிலும், இச்சாலைகள் பழைய நிலையிலேயே இருப்பதால் அன்றாடம் விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் தொடர்கதையாகி வருகின்றன.

குறிப்பாக, சிங்கம்புணரியில் இருந்து அரசினம்பட்டி, கல்லம்பட்டி வழியாக எஸ்.எஸ்.கோட்டை செல்லும் சாலையும், ம.கோவில்பட்டி மற்றும் வேங்கைப்பட்டி வழியாகப் பிரான்மலை செல்லும் சாலையும் மிக முக்கியமானவை. இச்சாலைகளில் அரசுப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் என எப்போதும் போக்குவரத்து பிசியாக இருக்கும். ஆனால், சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், எதிரெதிரே இரண்டு பெரிய வாகனங்கள் வரும்போது வழிவிட இடமில்லாமல் ஓட்டுநர்கள் திணறுகின்றனர். சில நேரங்களில் வாகனத்தைச் சாலையிலிருந்து கீழே இறக்கும்போது, பள்ளங்களில் சரிந்து கவிழும் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன.

இதே போன்ற நிலைதான் எஸ்.புதூர் ஒன்றியத்திலும் நிலவுகிறது. இப்பகுதி மக்கள் சாலைகளை அகலப்படுத்தக் கோரிப் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாநில நெடுஞ்சாலைத் துறையினர் அவ்வப்போது பெயரளவில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுச் செல்கிறார்களே தவிர, திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாகப் பண்டிகை காலங்கள், சுப முகூர்த்த நாட்கள் மற்றும் இப்பகுதியின் அடையாளமான மஞ்சுவிரட்டு விழாக்கள் நடைபெறும் நேரங்களில், இச்சாலைகளில் வாகனங்கள் கிலோமீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்பது வாடிக்கையாகிவிட்டது.

போக்குவரத்து நெரிசலால் அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட உரிய நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாத அவல நிலை நீடிக்கிறது. விபத்து இல்லாத பயணத்தை உறுதி செய்ய வேண்டுமானால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்தப் பிரதான சாலைகளை உடனடியாக அகலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். எனவே, மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து, நிதி ஒதுக்கீடு செய்து இந்தச் சாலைகளை விரிவுபடுத்தும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version