நடுக்கடலில் திகுதிகுவென எரிந்த அக்னிச்சட்டி: நாகை கீச்சாங்குப்பம் கன்னிகோயில் மாசிமகத் திருவிழாவில் மீனவர்களின் சிலிர்க்க வைக்கும் வழிபாடு!

நாகப்பட்டினம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற மீனவர் கிராமமான கீச்சாங்குப்பத்தில் அமைந்துள்ள அருள்மிகு கன்னிகோயிலில், இந்த ஆண்டுக்கான மாசிமகத் திருவிழா ஆன்மிக உணர்வுடனும், பாரம்பரிய வீரத்துடனும் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடலையும், கடல் வளத்தையும் வாழ்வாதாரமாகக் கொண்ட மீனவப் பெருமக்களின் குலதெய்வமாக விளங்கும் கடல் கன்னியைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் மாசி மாத பௌர்ணமி மற்றும் மக நட்சத்திரத்தை முன்னிட்டு இந்த விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 27-ஆம் தேதி காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்வான ‘நடுக்கடலில் அக்னிச்சட்டி விடும்’ வினோத நேர்த்திக்கடன் இன்று அரங்கேறியது.

விழாவையொட்டி இன்று அதிகாலை முதலே கன்னிகோயில் வளாகம் பக்தர்களின் கூட்டத்தால் களைகட்டியது. பம்பை மற்றும் உடுக்கை மேள முழக்கங்கள் முழங்க, கோயிலில் சிறப்பு யாகங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. பக்திப் பரவசத்தில் பெண் பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் மெய்மறந்து சாமி ஆடியது அங்கிருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தது. விழாவின் முக்கியக் கட்டமாக, கோயிலில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த பிரம்மாண்ட அக்னிச்சட்டியைப் பக்தர்கள் கைகளில் ஏந்தியவாறு, ஊர்வலமாகப் புறப்பட்டனர். பக்தி கோஷங்கள் விண்ணைப் பிளக்க, இந்த அக்னிச்சட்டி கடற்கரைப் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட படகு ஒன்றில் ஏற்றப்பட்டு, மீனவர்கள் அந்த அக்னிச்சட்டியை நடுக்கடலுக்குக் கொண்டு சென்றனர். அங்கு அலைகளின் நடுவே அக்னிச்சட்டி விடப்பட்டு, மீனவர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தி, கடல் அன்னைக்குத் தீபாராதனை காட்டினர்.

கரையில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், அக்னிச்சட்டி கடலில் விடப்பட்ட தருணத்தில் கடல் நீரைத் தங்கள் தலையில் தெளித்துக் கொண்டு புனித நீராடினர். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படக்கூடாது என்றும், கடல் வளம் பெருகி தங்களது வாழ்வாதாரம் செழிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மனமுருகி வேண்டிக் கொண்டனர். மாசிமகத் திருவிழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், சுமார் ஒரு மணி நேரம் வானத்தைப் பிளக்கும் வகையில் பிரம்மாண்டமான வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு நேர வானில் வர்ணஜாலம் காட்டிய வண்ணமயமான மத்தாப்புகள் மற்றும் வாணவேடிக்கைகளைக் கண்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உற்சாகமடைந்தனர். விழாவிற்கான பாதுகாப்புப் பணிகளை நாகை மாவட்டக் காவல்துறையினர் மேற்கொண்டிருந்தனர்.

Exit mobile version