தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமிக்கு, உலகில் மிகவும் அரிதாக காணப்படும் பிறவி ரத்தநாள குறைபாடு கண்டறியப்பட்டு, நவீன மற்றும் நுணுக்கமான அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அவரது உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
சுவாசிப்பதில் சிரமம், உடல் வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமி, சிகிச்சைக்காக மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட விரிவான பரிசோதனைகள் மற்றும் CT ஸ்கேன் மூலம், அவருக்கு “அபெர்னெதி மால்ஃபார்மேஷன்” எனப்படும் மிக அபூர்வமான பிறவி ரத்தநாள பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த பாதிப்பில், கல்லீரலுக்குச் சென்று சுத்திகரிக்கப்பட வேண்டிய ரத்தம், அசாதாரண இணைப்பு காரணமாக கல்லீரலைத் தவிர்த்து நேரடியாக இதயத்திற்குச் செல்கிறது. இதனால் கல்லீரலுக்கு போதிய ரத்த ஓட்டம் இல்லாமல், சுத்திகரிக்கப்படாத ரத்தம் இதயத்திற்குச் செல்வதால் சுவாச சிரமம், இதயம் மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற கடுமையான விளைவுகள் ஏற்படுகின்றன.
உலகளவில் இதுவரை சுமார் 300 பேருக்கு மட்டுமே இந்த அபூர்வ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் சில மருத்துவமனைகளில் மட்டும் இத்தகைய நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தென் தமிழகத்தில் முதல் முறையாக, இந்த அரிய நோயால் பாதிக்கப்பட்ட தேனியைச் சேர்ந்த சிறுமிக்கு, மிக நுணுக்கமான அறுவை சிகிச்சை மூலம் தவறான ரத்தநாள் இணைப்பை தடுத்து, கல்லீரலுக்குச் சரியான முறையில் ரத்தம் செல்லும் வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இந்த சிகிச்சையை வழிநடத்திய ஸ்ரீனிவாசன், இரைப்பை மற்றும் குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர், தலைமையிலான மருத்துவ குழு, தங்களின் உயர்ந்த அனுபவம், தொழில்நுட்பத் திறன் மற்றும் உலகத் தர மருத்துவ அறிவைப் பயன்படுத்தி இந்த சவாலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாட்களிலேயே சிறுமி முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம், தமிழக மருத்துவர்களின் திறமையும், உலகத் தரத்தில் சிக்கலான நோய்களுக்கே தீர்வு அளிக்கும் இந்திய மருத்துவ சேவையின் வலிமையையும் மீண்டும் ஒரு முறை உலகுக்கு எடுத்துக்காட்டுகிறது.
