போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாகியுள்ள நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் இருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், கழுகு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் கிருஷ்ணாவும் பிரசாத்துடன் தொடர்பில் இருந்ததாக போலீசார் கருதுகின்றனர். எனவே, விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், அவர் கேரளாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
அவரது, தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதால், கிருஷ்ணாவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை போலீசார் தொடங்கியுள்ளனர். இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடி வருகின்றனர். இதனிடையே, பிரசாத்துடன் திரையுலகை சேர்ந்த பலரும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுவதால், அது குறித்து தகவல்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.