கூத்தாநல்லூர் அருகே பொதுக்குடியில் திருமண ஊர்வலத்தில் போதை விழிப்புணர்வு கோஷம் மணமகன் ஊர்வலத்தில் இளைஞர்கள் நூதன விழிப்புணர்வு பிரச்சாரம்- பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருமண நிக்காஹ் நிகழ்ச்சியில், மணமகன் ஊர்வலத்தின்போது போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்ட சம்பவம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. கூத்தாநல்லூரில் உள்ள ஸ்கூல் பிரண்ட்ஸ் இல்ல திருமண நிக்காஹ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முகமது ஆசாரியின் அனீஸ் பாத்திமா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. திருமணத்தை முன்னிட்டு நடைபெற்ற மணமகன் ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர்கள், போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். போதைப் பொருட்களுக்கு எதிராக இளைஞர்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்பியதுடன், போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்க வேண்டும், போதைப்பொருட்களை ஒழிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு கருத்துகளையும் ஊர்வலத்தின் போது வலியுறுத்தினர். பொதுவாக திருமண ஊர்வலங்கள் கொண்டாட்டமாக நடைபெறும் நிலையில், அதில் சமூக அக்கறையுடன் போதை விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்தது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.













