மதுரையின் ஆன்மீக அடையாளமான அழகர்கோயில் மலை அடிவாரத்தில், காஞ்சி மகா பெரியவருக்கெனப் பிரம்மாண்டமான திருத்தலம் உருவாகி வரும் செய்தி பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுக்காக மகா பெரியவர் மதுரைக்குச் சுமார் 11 முறை வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அந்தத் தெய்வீகத் தொடர்பைப் போற்றும் வகையில், அழகர்கோயில் அருகே உள்ள பொய்கைக்கரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியை அடுத்துள்ள பகுதியில், ‘மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம்’ அமைப்பு சார்பில் இந்தக் கோயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மதுரை எஸ்.எஸ். காலனியில் ‘ஸ்ரீகாஞ்சி மகாபெரியவா கிருஹம்’ என்னும் ஆன்மீக மையத்தை மிகச்சிறப்பாக நிர்வகித்து வரும் ‘அனுஷத்தின் அனுக்கிரகம்’ அமைப்பின் நிறுவனர் நெல்லை பாலு, தற்போது அழகர் மலைப் பகுதியில் அமையவுள்ள இந்தக் கோயில் திருப்பணிகளையும் முன்னெடுத்து வருகிறார். தற்போது அஸ்திவாரம் மற்றும் தரைத்தளப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, மேல்மட்டக் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இயற்கை எழில் சூழ்ந்த அழகர் மலையின் சாரலில், தீர்த்தக்குளம் அருகே அமையவுள்ள இந்த ஆலயம், பக்தர்களின் தியானத்திற்கும் ஆன்மீக அமைதிக்கும் ஒரு புகலிடமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பணிகளின் விவரம் குறித்து நெல்லை பாலு விரிவாகக் கூறுகையில், “கோயில் இடம் மற்றும் கட்டுமானச் செலவுகள் அனைத்தையும் கணக்கிடுகையில், ஒரு சதுர அடிக்கு சுமார் 3,500 ரூபாய் வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒரு சதுர அடி வீதமாகவோ அல்லது தங்களால் இயன்ற அளவிலோ இந்தத் திருப்பணியில் மனமுவந்து பங்கெடுக்கலாம். நிதியுதவியாக மட்டுமன்றி, கட்டுமானத்திற்குத் தேவையான சிமெண்ட், செங்கல் உள்ளிட்ட தளவாடப் பொருட்கள் மற்றும் இதர கட்டுமானச் சாதனங்களை வழங்கியும் இந்த மகா கைங்கர்யத்தில் பங்கேற்கலாம். மகா பெரியவர் மீது பக்தி கொண்ட சாமானியர்களும் இதில் பங்களிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்,” எனத் தெரிவித்தார்.
மேலும், ஒரு லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் பெரும் பங்களிப்பு வழங்கும் கொடையாளர்களின் பெயர்கள் வரும் காலங்களில் கோயில் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட உள்ளன. இந்த அறக்கட்டளைக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80G பிரிவின்கீழ் வரி விலக்கும் உண்டு என்பது கூடுதல் தகவல். திருப்பணியில் கைகோர்க்க விரும்பும் பக்தர்கள் 94426 30815 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். மதுரை மாநகரின் எல்லையில் அமையவுள்ள இந்த மகா பெரியவர் கோயில், எதிர்காலத்தில் முக்கிய ஆன்மீகத் தலமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.















