தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் வியூகங்களை அதிரடியாகத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகம், பொன்னமராவதி ஒருங்கிணைந்த ஒன்றியக் கழகம் மற்றும் பொன்னமராவதி பேரூராட்சி அதிமுக சார்பில், அக்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரம்மாண்டமான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொன்னமராவதி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய கடைவீதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, புதுக்கோட்டை தெற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் வீட்டு வசதி வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து தலைமை தாங்கினார். அவர் பேருந்து பயணிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ள முக்கியமான ஐந்து தேர்தல் வாக்குறுதிகளை விரிவாக எடுத்துரைத்தார்.
குறிப்பாக, மகளிர் அனைவருக்கும் மாதம் 2,000 ரூபாய் வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘குல விளக்கு’ திட்டம், ஆண்களுக்கும் மகளிருக்கும் சமமான கட்டணமில்லாப் பேருந்து பயணத் திட்டம், அனைவருக்கும் பாதுகாப்பான உறைவிடத்தை உறுதி செய்யும் ‘அம்மா இல்லம்’ திட்டம் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது. மேலும், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பையும், மீண்டும் ‘அம்மா இருசக்கர வாகனம்’ வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியையும் பி.கே.வைரமுத்து முன்னிறுத்திப் பேசினார். அதிமுக ஆட்சியின் சாதனைகளையும், வருங்காலத் திட்டங்களையும் கேட்டறிந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் துண்டுப் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டனர்.
இந்த எழுச்சிமிகு நிகழ்வில், பொன்னமராவதி ஒன்றியச் செயலாளர் காசி.கண்ணப்பன், ஆலவயல் சி.சரவணன், பொன்னமராவதி பேரூர் செயலாளர் PL.ராஜேந்திரன் உள்ளிட்ட முக்கியக் கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். 2026 பொதுத்தேர்தலில் அதிமுகவின் இந்த ‘முத்தான ஐந்து வாக்குறுதிகள்’ மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
















