திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்த தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து இன்று (ஜனவரி 6, 2026) அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள பழமையான தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கடந்த டிசம்பர் மாதம் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும், சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கத்தைக் காரணம் காட்டி அரசு தரப்பில் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வக்ஃப் வாரியம் உள்ளிட்ட தரப்பில் 26 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அடங்கிய அமர்வு, இன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதில், சட்டம்-ஒழுங்கு பாதிப்பு என்பது அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட ஒரு ‘கற்பனை பூதம்’ (Imaginary Ghost) என்று நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். “கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆண்டிற்கு ஒருமுறை தீபம் ஏற்றுவது பொது அமைதியைக் குலைக்கும் என்பது அபத்தமானது. அத்தகைய அமைதி குலைவு ஏற்படுமானால் அதற்கு அரசே காரணமாக இருக்க முடியும். அரசியல் நோக்கங்களுக்காக எந்தவொரு மாநில அரசும் இவ்வளவு தரம் தாழ்ந்து செயல்படக் கூடாது” என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அந்த தீபத் தூண் தர்காவுக்குச் சொந்தமானது என்ற வாதத்தைச் ‘சிறுபிள்ளைத்தனமானது’ என்று நிராகரித்த நீதிமன்றம், அது கோயில் நிர்வாகத்திற்கே சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தியது. மலை உச்சியில் உயர்ந்த இடத்தில் தீபம் ஏற்றுவது என்பது மக்கள் கீழிருந்து தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஆகம மற்றும் கலாச்சார நோக்கத்தைக் கொண்டது என்றும், இதற்கு எந்த ஆகமத் தடையும் இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
தீர்ப்பின் முக்கிய வழிகாட்டுதல்கள்:
கார்த்திகை தீபத்தன்று கோயில் நிர்வாகமே தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும்.இந்த நிகழ்வை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக மேற்பார்வையிட வேண்டும். பாதுகாப்பு மற்றும் தொல்லியல் காரணங்களுக்காக, தீபம் ஏற்றச் செல்லும் கோயில் பணியாளர்களுடன் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை.இந்து மற்றும் முஸ்லிம் தரப்பினர் ஒருவருக்கொருவர் இடையூறு இன்றி தத்தமது வழிபாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். இது பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால், தொல்லியல் துறை (ASI) தேவையான நிபந்தனைகளை விதிக்கலாம்.
இந்தத் தீர்ப்பை வரவேற்றுப் பேசிய மனுதாரர் ராம ரவிக்குமார், “இது முருகப்பெருமானின் அருளால் கிடைத்த வெற்றி. இதற்காகப் போராடி மறைந்த தியாகிகளுக்கு இந்த வெற்றியைச் சமர்ப்பிக்கிறேன்” என்றார். அதேபோல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இத்தீர்ப்பை வரவேற்றதுடன், திமுக அரசு வீண் பிடிவாதம் பிடிக்காமல் நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த தீர்ப்பு திருப்பரங்குன்றம் பகுதியில் பெரும் பரபரப்பையும், பக்தர்களிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

















