‘உங்கள் கனவை சொல்லுங்கள்’ எனும் புதிய திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை வரும் 9 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, வீடு வீடாக சென்று ஒவ்வொரு குடும்பத்தின் கனவுகளை தெரிந்து கொள்ளும், “உங்கள் கனவை சொல்லுங்கள்” எனும் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக கூறினார். இத்திட்டத்தின் படி, 50 ஆயிரம் தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று படிவங்கள் அளிப்பார்கள். அதில், அரசு செயல்படுத்தும் 10 திட்டங்களில் பயன் பெற்றவர்கள் குறித்த கேள்விகளும், குடும்பத்தின் கனவு குறித்த 3 கேள்விகளும் இடம் பெற்றிருக்கும் என குறிப்பிட்டார்.
மேலும், வீட்டில் உள்ள 15 முதல் 29 வயது வரையிலான இளைஞர்களின் கனவை அறிய, பிரத்யேக இணையதளம் தொடங்கப்படும் என்றும் அன்பில் மகேஷ் தெரிவித்தார். யு.கே.எஸ் என அழைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஜனவரி 9 ஆம் தேதி முதலமைச்சர் தொடங்கி வைக்க இருப்பதாவும் அவர் கூறினார்.

















