பிகார் மாநிலத்தில் காங்கிரஸ் – பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட கடும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது என குற்றம்சாட்டி, பிகார் முழுவதும் வாக்கு உரிமை பாதுகாப்புப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
தர்பங்காவில் நடந்த பேரணியில், காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயை குறித்து இழிவான கோஷங்களை எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை கண்டித்த பாஜகவினர், காங்கிரஸின் அரசியல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாஜகவினர் பிகார் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்தின் போது காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், இரு தரப்பினரும் கட்டைகளால் தாக்கிக் கொண்டதால் சூழ்நிலை பரபரப்பாக மாறியது.
உடனே சம்பவ இடத்தில் விரைந்த காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து, மோதலை களைந்து வைத்தனர். காயமடைந்தோர் அளித்த புகாரின் அடிப்படையில், இரு கட்சியினர்மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














