குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. 242 பயணிகள் சென்றிருந்த இந்த விமானத்தில், விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்ற ஒருவரே உயிர் பிழைத்தார். மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட தணிக்கையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளில் 100க்கும் மேற்பட்ட பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பது வெளிப்பட்டது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களால் இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
இந்த சூழலில், அமெரிக்க வழக்கறிஞர் ஆண்ட்ரூஸ், ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் நீடித்த தாமதத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர்,
அமெரிக்காவில்கூட ரத்தன் டாடா யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது பணி நெறிமுறைகள், எளிமையான தன்மை, ஊழியர்களை கவனிக்கும் மனப்பான்மை ஆகியவை அனைவருக்கும் தெரிந்தவை. அவர் இன்றும் இருந்திருந்தால், பாதிக்கப்பட்டவர்கள், ஊழியர்கள் ஆகியோர் இவ்வாறு அதிகாரப்பூர்வ செயல்முறைகளால் சிக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். இழப்பீடும், ஊதியமும் தாமதிக்காது வழங்கப்பட்டிருக்கும். துக்கத்தில் இருக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தடைகளை அவர் தடுத்திருப்பார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், இழப்பீடு தொடர்பாக இன்னும் பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களின் கடின நிலைகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.