சென்னை: “நடிகர்கள் அரசியலுக்கு வருவது இயல்பான விஷயமாக இருக்கலாம். ஆனால், தலைமை பண்பு இல்லாமல் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கடும் விமர்சனத்தைவிடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ‘மதச்சார்பின்மை காப்போம்’ என்ற கருத்தரங்கில் மாணவரணி சார்பில் கலந்துகொண்ட அவர், நடிகர் விஜயை நோக்கி விமர்சனத்தையும், அரசியல் தலைமை பண்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
“தலைமை என்பது பொறுப்புடன் பேசும் பண்பு”
பேச்சின் போது அவர் கூறியதாவது:
“நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தாக்கம் உண்டு. அது சமூகத்தைக் கலவரமாக்கக்கூடும். துப்பாக்கிச்சூடு வரை போய்ச் சேரக்கூடும். அதனால் தலைமை என்பது பொறுப்புணர்வுடன் பேசும் பண்பாக இருக்க வேண்டும்,” என்றார்.
விஜயை விமர்சித்தார்
“சில பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது, ஆரம்பத்தில் ஈர்ப்பு இருக்கும். ஆனால், தலைமை பண்பு இல்லாமல் அவர்கள் நீண்ட காலம் நிலைத்து நிற்க முடியாது. கைகள், கால்கள் ஆவேசமாக மேலே எழுப்பி பேசுவதால் தலைமை உருவாகாது. உணர்ச்சிகரமான பேச்சுகள் மட்டுமே போதாது. பொறுப்பும் தேவை,” என்று அவர் வலியுறுத்தினார்.
இவ்வாறு அவர் நடிகர் விஜயின் அரசியல் செயல்பாடுகள் மீது நேரடி விமர்சனத்தை பதிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது.
அ.தி.மு.க – பா.ஜ. கூட்டணியையும் சாடினார்
மேலும், அ.தி.மு.க., – பா.ஜ. கூட்டணியை விமர்சித்த அவர், “இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. பா.ஜ.வின் கருத்தியலுக்கு அ.தி.மு.க. உடன்பட்டு செயல்படுகிறது. அதனைக் கடுமையாக சுட்டிக்காட்டுகிறோம்” என்றார்.
ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது
இதையடுத்து, எஸ்.சி – எஸ்.டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரி, அம்பேத்கர் உயர் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நிதி வழங்க கோரியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
















