ஏற்கெனவே 50-க்கும் மேற்பட்ட கொடூரமான கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் “Dr. Death” என அழைக்கப்படும் தேவேந்தர் சர்மா, மீண்டும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டில் பரோலில் வெளியே வந்தபின் தப்பியோடிய இவர், ராஜஸ்தானில் உள்ள ஆசிரமத்தில் மறைந்திருந்த இடத்திலிருந்து திங்களன்று கைது செய்யப்பட்டார்.
67 வயதான தேவேந்தர் சர்மா அலிகாரைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர். ஆயுர்வேத மருத்துவத்திலும் அறுவை சிகிச்சையிலும் பட்டம் பெற்று, 11 ஆண்டுகள் தனியார் கிளினிக் நடத்தி வந்த இவர், பின்னர் தொழில்துறையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குற்றவழியில் மாறினார்.
1994ல் ஒரு எரிவாயு விற்பனை ஒப்பந்தத்தில் ரூ.11 லட்சம் முதலீடு செய்த அவர், அதில் தோல்வியடைந்த பிறகு போலி எரிவாயு நிறுவனம் ஒன்றை தொடங்கி, சட்டவிரோத உறுப்புத் தானம், மனிதக் கடத்தல் மற்றும் கொலைகளில் ஈடுபட்டார்.
2002 முதல் 2004 வரையிலான காலப்பகுதியில் டாக்ஸி மற்றும் லாரி ஓட்டுநர்களை நம்பவைத்து வாகனங்களை புக் செய்து, அவர்களை கொன்ற பின், வாகனங்களை சந்தையில் விற்றார். கொல்லப்பட்டவர்களின் உடல்களை உத்தரபிரதேசம் ஹசாரா கால்வாயில் உள்ள முதலைகளுக்கு உணவாக போடுவதாகும் செயல் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. வாகனங்களைச் சந்தையில் ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை விற்றுள்ளார்.
இதுவரை அவர்மீது 27 வழக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் அவருக்கு ஏழு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், குர்கானில் நடந்த வழக்கில் மரண தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
பொதுவாக 21 டாக்ஸி ஓட்டுநர்களைக் கொன்றதாக ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட சர்மா, பின்னர் 50-க்கும் மேற்பட்ட கொலைகளில் தானே ஈடுபட்டதாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டார்.
மேலும், 1998 – 2004 காலப்பகுதியில், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 125-க்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை நடத்தியதாகவும், ஒரு சிறுநீரகத்திற்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பரோலில் வெளியே வந்தபின் தலைமறைவான இவரை, பல மாதங்களாக போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது மீண்டும் கைது செய்துள்ளனர். அவர்மீது தொடரும் விசாரணைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.