அமராவதி : ஆந்திராவின் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், நக்சல் அமைப்பின் தலைவன் சலபதியின் மனைவி அருணா உள்ளிட்ட மூன்று நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உளவுத்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில், அந்த பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளை கண்காணித்து வந்த பாதுகாப்புப் படையினர், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், நக்சலைட்டுகள் தாங்களே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்கத்திற்கு பதிலளித்த பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில், அருணா உட்பட மூன்று நக்சலைட்டுகள் உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் இருந்து வெடிமருந்துகள் மற்றும் மூன்று AK-47 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
சலபதியின் மனைவி அருணா, நக்சல் இயக்கத்தில் முக்கியப் பொறுப்பாளராக இருந்தவர். சலபதி, கடந்த ஜனவரியில் நடைபெற்ற மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரது மனைவி அருணாவின் சாவு, நக்சல் அமைப்பிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
அப்பகுதியில் இன்னும் நக்சலைட்டுகள் பதுங்கியிருக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரியவர, தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.